ஆலந்தூர்: கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், கிண்டி கத்திப்பாரா பாலத்தில் கீழ் ₹18 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நீர்வீழ்ச்சி, கலையரங்கம், திரையரங்கம், வண்ண விளக்குகள், நடைமேடை, உணவு கடைகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கான, பூமி பூஜை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி நடந்தது. இந்த பணிகள், 365 நாட்களில் முடிவடையும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. பின்னர், தடுப்பு வேலி அமைத்து தரையை சமன்படுத்தும் பணி, சிறு சிறு பில்லர்கள் அமைக்கும் பணி போன்றவைகள் மட்டும் கடந்த 9 மாதங்களில் நடந்துள்ளது. தற்போது, மணல் கொட்டியும், கற்களை ஆங்காங்கே சிதற விட்டும் பொலிவிழந்து காணப்படுகிறது. பொழுதுபோக்கு பூங்கா விரைவில் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.முறையாக திட்டமிடாததே இதற்கு காரணம் என்றும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஒப்பந்த பணி நிறைவேற கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைய இன்னும் 3 மாதங்களே உள்ளதால், இந்த பணியினை விரைந்து முடிக்க மெட்ரே ரயில் நிர்வாகம், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாருக்கு உத்தரவிட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி